அபிராமிஅந்தாதிபாடல்80
#அபிராமிஅந்தாதிபாடல்80
கூட்டியவா
என்னைத் தன்னடியாரில்
கொடிய வினை
ஓட்டியவா
என்கண் ஓடியவா
தன்னை
உள்ள வண்ணம்
காட்டியவா
கண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா
நடமாடகத் தாமரை
ஆரணங்கே.
#பொருள்
ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே!
என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே!
நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே!
ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே!
உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது.
இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே!
உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன்.
#பொருளுரை
தாமரை மலர் போன்ற அழகியே,
உன் உண்மையான உருவைக் கண்ட என் கண்ணும் நெஞ்சும் பெரும் மகிழ்ச்சியடைகிறது.
என் தீவினைகளை ஒழித்து உன்னுடைய அடியார்களில் ஒருவனாக அழைத்து ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என் முன்னே தோன்றுவதற்கென்றே நீ நடத்திய நாடகமா இது?
தன்னுடைய பக்தர்களைச் சோதிப்பது கடவுளரின் பொழுதுபோக்கு. இதெற்கென்றே நூற்றுக்கணக்கில் புராணக்கதைகள் இருக்கின்றன.
சோதனையின் ஆழம் பலனின் பெருமையைப் பொருத்து அமையும். பிறவாமை வேண்டி அபிராமியை வணங்கிய பட்டருக்கு உயிரிழக்கும் சோதனையை வழங்கியிருப்பது பொருத்தமாகப் படுகிறது பட்டருக்கு.
'அரசனிடம் அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்ல வைத்தது அபிராமி;
பிழையைத் திருத்த நிலவைக் கொண்டு வா என்று அரசனை ஆணையிட வைத்தது அபிராமி;
அவசரப்பட்டு விட்டோமே என்று கையைப் பிசைந்து நின்றவருக்கு வேறு வழி எதையும் எண்ண வைக்காமல் அபிராமியைப் பற்றியே பாட வைத்தது அபிராமி;
சரியான நேரத்தில் நிலவை உருவாக்கி தன்னை வெளிக்காட்டியது அபிராமி; காட்சியளித்தோடு தன் அண்மையில் சேர்த்தது அபிராமி' என்று அனைத்தையும் அபிராமியின் செயலாகவே பார்க்கிறார் பட்டர்.
தன்னை ஆட்டிவைத்தமைக்காக ஆனந்தப்பட்டுச் சிறந்த இயக்குனருக்கான ஆரணங்கு விருதை அபிராமிக்கு வழங்குகிறார் பட்டர்.
#சகலுமும்அவளே#

Comments
Post a Comment