அபிராமிஅந்தாதி பாடல்79
#அபிராமிஅந்தாதி பாடல்79
விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட
நெஞ்சு உண்டு எமக்கு,
அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று,
வெம் பாவங்களே செய்து,
பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும்
கயவர் தம்மோடு,
என்ன கூட்டு இனியே?
#பொருள்
அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு.
வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு.
ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து,
பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு?
(அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).
#பொருளுரை1
அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல்,
பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை)
'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின்,
பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர்.
இந்தப் பாடலின் பின்னணி:
'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே'
என்று உருகி உருகிப் பாடிய பட்டரின் அருந்தமிழுக்கு மயங்கிய அபிராமி, தன் காதணியை எடுத்து வானில் சுழற்றி எறிந்தாளாம்.
வைரத்தரளக் குழை கொப்பான அபிராமியின் காதணி வானில் முழு நிலவையும் மிஞ்சும் அளவுக்கு ஒளி வீசி நின்றதாம்.
அந்தப் பரவசத்தில் பட்டர், 'அன்னையைப் பார்த்தபின் இன்னும் என்ன நெஞ்சமே?' என்று பாடியிருக்கிறார்.
பழி என்றால் பாவம், வீண்,
பலனற்ற என்று பொருள். '
பழிக்கே சுழன்று' என்பது வீணானப் பிறவிச் சுழற்சியைக் குறிக்கிறது. வேதம் என்றால் அறிவு. '
வேதம் சொன்ன வழி' என்பது இங்கே அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவைக் குறிக்கிறது. வேத முறைப்படி வணங்கச் சொல்லவில்லை பட்டர்.
அருளைத் தவிர வேறொன்றுமே இல்லையாம் அபிராமியின் விழிகளில்.
வேத முறையோ பேத முறையோ, அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவு இருந்தால் போதும். எப்படி வணங்கினாலும் யார் வணங்கினாலும் அவளுடைய கொழுங்கடைப் பயனுண்டு என்பதே பாடலின் சாரம்.
அபிராமி அருள் புரிந்து விட்டாளே?
நிலவு தோன்றிவிட்டதே?
பட்டர் இந்தப் பாடலோடு
ஏன் நிறுத்தவில்லை என்று தோன்றுகிறது.
பிறவாமைக்கான பாயின்ட் டு பாயின்ட் நேர்வழி வண்டியுடன் அபிராமி காத்திருக்கும் பொழுது பட்டர் தொடர்ந்து பாடியதேன்?
அபிராமியைக் கண்ட ஆனந்தத்தில் இன்னும் ஒன்றிரண்டு பாட்டு பாடியிருந்தாலும் பரவாயில்லை,
கொஞ்சம் இரம்மா,
இன்னும் இருபது பாட்டு பாக்கியிருக்கிறது'
என்று பாடியிருக்கிறாரே?
கடவுளைக் கண்டவுடன் '
சட்டி சுட்டதடா' என்று உயிர் துறந்த முனிவர்களின் கதையை முன்பு பார்த்தோம்.
பட்டர் தொடர்ந்து பாடியது தமிழுக்கும் நமக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. குறை சொல்வானேன்?
#பொருளுரை2
அன்னையின் விழியிலே நமக்கு வேண்டிய அருள் முழுதும் இருக்கின்றது.
அவள் தனது கடைக்கண் தன்னைக் காட்டிவிட்டால், நமக்கு என்ன வேண்டுமோ அது முழுதும் ஒரு கணத்தில் கிடைத்துவிடாதா என்ன!
அந்த "அபிராமவல்லியின் அடியிணையைப் பற்று" என்று வேதம் சொல்லுகிறது. வேத மாதா அந்த அன்னையின் அடி பணிந்தல்லவா கிடக்கிறாள்! 'அரு மறைகள் பழகிச் சிவந்த பதாம்புயம்" அன்றோ அந்த அன்னையின் திருவடிகள்! அப்படி அந்த வேதம் கூறியபடி செல்ல, அவளை வழிபட, நமக்கு நெஞ்சகம் இருக்கின்றது.
இப்படி, இந்த வழியை விடுத்து, கயவர் தம்மோடு கூடவேண்டாமே என்கிறார் பட்டர். அதுவும், எப்படிப்பட்ட கயவர்கள்? பழிக்கே சுழலும் கயவர்கள். வெம் பாவங்களே செய்பவர்கள். தம்மோடு கூடியவர்களை, பாழும் நரகக் குழியிலே அழுத்தக் கூடிய கொடியவர்கள். அவர்களோடு, நாம் கூடலாமா? நிச்சயம் கூடாது.
அந்த அன்னையை அடைய, சத்சங்கம் வேண்டும். கெட்டவர்களின் சகவாசம் நிச்சயமாக வேண்டாம்.
அந்த அன்னையே, நமக்கு நல்ல சகவாசம் ஏற்படவும், சத்சங்கம் ஏற்படவும், அவளது கடைக்கண் பார்வை நம் மேல் படவும் அருள் புரிய வேண்டும்.

Comments
Post a Comment