#அபிராமிஅந்தாதிபாடல்78
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
#அபிராமிஅந்தாதிபாடல்78
செப்பும் கனக கலசமும்
போலும்
திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி,
அணி தரளக்கொப்பும்,
வயிரக் குழையும்,
விழியின் கொழுங்கடையும்,
துப்பும்,
நிலவும் எழுதிவைத்தேன்,
என் துணை விழிக்கே
#பொருள்
என் தாயே! அபிராமி!
உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன்.
அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை;
அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை;
அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு;
வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்;
குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.
#பொருளுரை
அபிராமி நமக்கு எல்லாம் தாயானவள்.
அபிராமி பட்டரும் அந்தத் தாய்க்குக் குழந்தை அல்லவா!
சிறு குழந்தையின் பார்வை அன்னையின் ஸ்தனங்களின்மீது படிகிறது. குழந்தைகளின் பசியாற்றுபவை அவைதாமே!
செப்பு போன்ற ஸ்தனபாரங்களால் அபிராமி அன்னை இந்த உலகுக்கே ஞானப்பால் கொடுக்கிறாள்.
அந்த ஸ்தனபாரங்கள் தங்கக் காப்பு கொண்டிருக்கின்றன.
அவற்றின் மேல் சந்தங்க் குழம்பு அப்பப்பட்டிருக்கிறது. அப்படியே அந்தக் குழந்தையின் பார்வை அன்னையின் காது நோக்கிப் போகிறது.
காதிலே அன்னை வைரத்தால் ஆன குழையும் கொப்பும் அணிந்து கொண்டிருக்கிறாள்.
காதிலிருந்து, பார்வை அன்னையின் அருட்கண்கள் நோக்கிப் போகிறது. அந்தக் கண்கள் அருள் நிரம்பி இருக்கின்றன.
அந்தக் கடைக்கண்கள் நமக்கு அருளை வாரி வழங்கக் காத்து இருக்கின்றன.
குழந்தையின் பார்வை அப்படியே அன்னையின் இதழ் நோக்கி இறங்குகின்றது.
பவளம் போன்ற இதழ்களில் புன்னகை அரும்பி இருக்கின்றது. அந்தப் புன்னகை நிலவின் ஒளி போன்று தோன்றுகின்றது.
இந்த உருவ ஓவியத்தை அந்தக் குழந்தை தனது இரு கண்களிலும் எழுதி வைத்துக் கொள்ளுகின்றது. மனதிலே பத்திது வைத்துக் கொள்ளுகின்றது.
அப்படிப் பதித்துக் கொண்டபின், அந்தக் குழந்தைக்கு எங்கு பார்த்தாலும் அன்னையே காட்சி தருகின்றாள்.
எங்கு பார்த்தாலும் அவளே தெரிகின்றாள்.
நமக்கும் அந்த அபிராமியே எங்கும் தெரியட்டும்!
அவளது அருள், நமக்கும் கிடைக்கட்டும்!

Comments
Post a Comment