அபிராமிஅந்தாதிபாடல்76
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்; நின் குறிப்பு அறிந்து
#அபிராமிஅந்தாதிபாடல்76
மறித்தேன் மறலி
வருகின்ற நேர்வழி;
வண்டு கிண்டி
வெறித்தேன்
அவிழ் கொன்றை
வேணிப் பிரான்
ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே,
குடிபுகுதும்
பஞ்ச பாண பயிரவியே
#பொருள்#
ஏ அபிராமி!
பஞ்ச பாணங்களையுடையவளே!
உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன்.
உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன் வரும் வழியைக் கண்டு கொண்டேன்.
கண்டதும் அல்லாமல்,
அவன் வருவதற்கு முன்,
அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே).
வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு,
தானொரு பாதியாக அமர்ந்தவளே!
#பொருளுரை#
அம்மையே! அபிராமி!
உன் கோலம் முழுதும்,
அழகு முழுவதும், வடிவம் முழுவதும் நான் என் மனதில் வாங்கிக் கொண்டு விட்டேன்.
உன்னை அறிந்து கொண்டதனால், அந்த காலன் வரும் வழியை அறிந்து கொண்டு,
அதனை அடைத்து விட்டேன். மொய்க்கும் கொன்றை மாலையை தலையிலே சூடியிருக்கும் அந்த சந்திர சேகரருக்கு இடப் பாகத்திலே அமர்ந்தவளே!
பஞ்ச பாணம் கொண்டவளே!
பைரவியே!
இங்கே மூன்று விஷயங்களைப் பேசுகிறார் பட்டர்.
ஒன்று,
அந்த அபிராமியை முழுதும் அறிந்து கொண்டு விட்டதைப் பற்றி. அந்த அன்னையிடம் நாட்டம் கொண்டு, அவளையே தியானம் செய்து, அவளது ரூப லாவண்யங்களையே சிந்தித்து வருபவர்களது வாழ்வு எப்படி இருக்கும் என்பது பற்றிய சிந்தனை.
இரண்டு,
இந்த அன்னை பற்றிய சிந்தனை, அவரது அடியார்களுக்கு, எவ்வாறு மரணத்தையே கூட வெல்லும் விதத்தில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பது.
மூன்று,
இப்படி அடியார்களுக்கு அருள் செய்ய்யும் அன்னை அபிராமித் தாய், தான் எப்படி ஈசனாரை வெற்றி கொண்டாள் என்பது.
முதலில்,
இந்த மூன்றாவது சிந்தனை பற்றிப் பார்ப்போம்.
ஈசன், 'காலாந்தகன்' என்று பெயர் பெற்றவர்.
மார்க்கண்டேய மகரிஷியைக் காக்க, அந்தக் காலனையே உதைத்த பாதம் கொண்டவர். ஆனால், அந்தப் பாதம், உண்மையில் யாருடையது?
இடது பாதமல்லவா உதைத்தது?
அந்த இடப் பாகம் அமர்ந்திருப்பவள் அந்த அன்னை அபிராமி அல்லவா?
பரமசிவனார், 'அழிக்கும் கடவுள்' என்று பெயர் பெற்றவர்.
அந்தக் காமனையும் அழித்தவர்.
ஆனால்,
அவரும் அந்த அன்னையிடம் தன்னையே இழந்தாரே!
இப்படி, அந்தக் காலனையே உதைத்த திருப்பாதங்களை நாம் பற்றினால், அந்தக் காலனிடமிருந்து நமக்கும் விடுதலை கிடைக்கும் என்பதே
இங்கு குறிப்பு.
அன்னையைப் பற்றி இங்கு குறிக்கும் திரு நாமங்களும் கூட, மிக அழகாக் அமைந்து இருக்கின்றன :
'பஞ்ச பாணம் கொண்டவள்' என்றும், 'பைரவி' என்றும் பேசப்படுகிறாள் அன்னை.
பஞ்ச பாணம் கொண்டவள் என்ற நாமத்தால், ஈசனின் இடப் பக்கத்தை வெற்றி கொண்டவிதம் குறிக்கப் படுகிறது.
அந்தக் காமனையே ஈசன் எரித்தாலும், இந்தக் காமாட்சியிடம் தன்னை இழந்தார் அல்லவா! அதனால்தானே அன்னை,
பஞ்ச பாணங்களையும் தனது ஆயுதங்களாகக் கொண்டாள்! 'பைரவி' என்றும் பேசப்படுகிறாள் அன்னை. 'பைரவர்' என்ற நாமம், ஈசனுக்கு,
'கால பைரவர்' என்று குறிக்கும்போது சொல்ல்ப்படும், அதே போல,
இங்கே, காலனை வெல்ல நமக்கு அருள் செய்வதனால், அன்னையின் நாமத்தையும், 'பைரவி' என்று குறிக்கிறார் பட்டர்.
இப்படி, 'பஞ்ச பாணியாய்;, 'பைரவி'யாய்,
இருக்கும் அன்னை, தன்னை அறிந்து கொண்டவர்களுக்கு,
முழுதும் உணர்ந்து கொண்டவர்களுக்கு,
அந்த மரணத்தையுமே கூட வெல்லக்கூடிய ஒரு மாபெரும் சக்தியாக மாறி அருள் செய்கிறாள் என்பதே மற்றா இரு சிந்தனைகளும்.
அந்த அன்னை நம்மை அந்தக் காலனிடமிருந்தும் காமனிடமிருந்தும் காக்கட்டும்!
#ஓம்ஶ்ரீஅபிராமிதாயேநமஹ#

Comments
Post a Comment