#அபிராமிஅந்தாதிபாடல்70#
#அபிராமிஅந்தாதிபாடல்70#
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன்;
கடம்பாடவியில்
பண் களிக்கும்
குரல் வீணையும்,
கையும் பயோதரமும்,
மண் களிக்கும்
பச்சை வண்ணமும் ஆகி,
மதங்கர்க்குலப்பெண்களில்
தோன்றிய
எம்பெருமாட்டிதன் பேரழகே
பொருள்:-
ஏ, அபிராமி!
உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன்.
கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே!
நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல்,
வீணை தாங்கிய அழகிய கரங்கள்,
திருமுலை தாங்கிய திருமார்பு,
மண்மகள் மகிழும் பச்சை நிறம் -
இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே!
உன்னைக் கண்டு கொண்டேன்.
அபிராமியைக் கண்ட விததிதினைப் பற்றிப் பேசுகிறா அபிராமி பட்டர் இங்கே.
அபிராமியை நான் என் இரு கண்களும் களிக்கும் விதத்தில் கண்டு கொண்டேன்.
கடம்ப வனத்திலே அவள் உறைந்து இருந்த காட்சியை நான் கண்டு கொண்டேன்.
பண்ணும் விரும்பிக் களிக்கும் குரலுடையவள் அவள்.
கையினில் வீணையை உடையவள். திருமார்பினிலே அழகிய திரு முலைகளைக் கொண்டவள்.
இந்த மண்ணும் விரும்பும் விதத்தில் பச்சை வண்ணம் கொண்டவள் அவள்.
மாதங்க முனிவரின் மகளாகப் பிறந்து, மாதங்கி என்று பெயர் கொண்ட,
மதங்க குலத் தோன்றல் அவள். இப்படி, பெண்களில் எல்லாம் மிகச் சிறந்த அழகுடையவளாகத் தோன்றிய எம்பெருமாட்டியின் பேரழகை நான் என்னவென்று சொல்லுவேன்?
எப்படி வர்ணனை செய்வேன் என்று பேசுகிறர் பட்டர்.
யாராவது பாடினால்தான் பண் என்பதே உருவாகும்.
ஆனால், இங்கோ, அந்தப் பண் என்பதே, எம்பெருமாட்டியின் குரலை அனுபவித்துக் களிக்கிறதாம்!
பச்சைப் பசேல் என்று பசுமையாடையைப் புனைந்து இருக்கும் பூமியோ,
அவளது பச்சை நிறத்தினைப் பார்த்து,
பெருமாட்டியும், என்னுடைய நிறத்தை இன்று பூண்டு இருக்கிறாள்' என்று குதூகலித்துக் களிக்கின்றதாம்!
மிக அழகான கற்பனையும் வர்ணனையும் இங்கே எம்பெருமாட்டியினைப் பற்றி பேசுகையில்,
பட்டரின் நாவில் நர்த்தனம் செய்கின்றன
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன்;
கடம்பாடவியில்

Comments
Post a Comment