#அபிராமிஅந்தாதிபாடல்65#
#அபிராமிஅந்தாதிபாடல்65#
ககனமும் வானும்
புவனமும் காண,
விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த
தவப்பெருமாற்கு,
தடக்கையும் செம்முகனும்,
முன்னான்கிரு
மூன்று எனத் தொன்றிய
மூதரிவின்மகனும்
உண்டாயது அன்றோ?-வல்லி!
நீ செய்த வல்லபமே!
பொருள்:-
ஏ ,ஆனந்தவல்லி அபிராமி!
உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார்.
அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய்.
உன்னுடைய அன்புதான் என்னவோ!
பொருளுரை:-
பட்டர் நமக்கு முருகக் கடவுள் தோன்றிய வரலாற்றைக் கூறுகிறார்.
தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துயரப்பட்ட போது,
இந்த சூரனை அழிக்க,
சிவபெருமானிடமிருந்து தோன்றிய ஒரு மகனால்தான் முடியும் என்று தெரிந்து கொண்டு,
சிவ பெருமானைப் போய்ப் பார்க்கிறார்கள்.
சிவ பெருமானோ, ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
என்ன செய்வது?
தவக் கோலத்தில் இருப்பவரிடமிருந்து எப்படி ஒரு சிசு தோன்ற முடியும்?
குழந்தை உருவாக வேண்டு மென்றால், முதலில், தலைவனும் தலைவியும் கலக்க வேண்டும்.
தலைவன், தலைவியிடம் காதல் வயப்பட வேண்டும்.
இங்கோ, சிவ பெருமான் தவம் செய்து கொண்டு இருக்கிறார்.
என்ன செய்வது?
சிந்தனை செய்த தேவர்கள்,
ஒரு யோசனை செய்தார்கள்.
காதல் வயப்படுவதும், காமத்தில் கூடுவதும் யாரால் நடக்கிறது?
அந்தக் காமனால்தானே?
அந்த மன்மதனால்தானே? சரி,
அந்த மன்மதனையே, துணைக்குக் கொள்வோம் என்று, அந்த மன்மதனின் துணையை நாடினார்கள்.
மன்மதனும், இருமாப்புடன், "எவரானால்தான் என்ன? அவர்களின் தவக்கோலத்தை நான் கலைப்பேன்.
எனது காமக் கணைக்கு இரையாகாமல் யார் இருக்க முடியும்?" என்று கிளம்பினான்.
சிவபெருமான் மேல் கணை தொடுத்தான். கணை மேலே பட்டதும் கண் விழித்த சிவ பெருமான் சினம் கொண்டார்.
தனது தவத்தினக் கலைத்த மன்மதனை, தனது நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார்.
அந்த வானும், மண்ணும், அனைத்து உலகங்களும் பார்க்க, இந்த காம தகனம் நிகழ்ந்தது. அந்த காமத்தினைத் தோற்றுவிக்கக் கூடிய வில்லினைக் கொண்ட காமன் எரிந்து போனான்.
பின்னர், தேவர்கள் சென்று சிவ பெருமானிடமே முறையிட்டனர்.
அவர்கள் மேல் கருணை கொண்டு, சிவ பெருமானும், முருகப் பெருமானைத் தோற்றுவித்தார்.
இந்தக் கதையினைத்தான்,
சற்றே நையாண்டி செய்யும் விதத்தில் பேசுகிறார் பட்டர்.
அந்தக் காமனையே எரித்துவிட்ட சிவபெருமானுக்கு, முருகனைத் தோற்றுவிக்கும் ஆற்றல் எங்கிருந்து வந்தது அன்று கேட்கிறார் அபிராமி பட்டர்.
குழந்தையைப் பெற்றெடுப்பது தாயினால்தானே முடியும்?
சிவபெருமானின் அங்கத்தில் பாதி அந்த உமை அல்லவா?
சிவபெருமானுக்கு, 'உமை ஒரு பாகன்' என்றே பெயர் ஆயிற்றே!
அதனால், சிவ பெருமானின் நெற்றியிலிருந்து தோன்றிய பொறியிலிருந்து முருகப் பெருமான் உற்பத்தி ஆயிருந்தாலும்,
அந்த நிகழ்வும், அந்த உமையின், அந்த அபிராமியின் கருனையினால் தான் என்று சொல்லி முடிக்கிறார்!
அதுவும், சாதாரணக் குழந்தையா அந்த முருகக் கடவுள்? இல்லை!
தடக்கைகள் முன்னான்கு - அதாவது பன்னிரெண்டு திருக்கரங்கள். செம்முகங்கள் இருமூன்று -
அதாவது ஆறு திருமுகங்கள். இப்படி பெரும் குழந்தையாக அல்லவோ பிறந்தது. பிறக்கும் பொழுதே பெரும் அறிவுடன் அன்றோ பிறந்தது.
பின்னர் ப்ரணவத்திற்கு பொருள் தெரியவில்லை என்பதனால் பிரமனையே கைது செய்து சிறையில் தள்ளியது.
தந்தைக்கே உபதேசம் செய்தது!
இது சிவ பெருமானால் மட்டும் விளைந்ததா? இல்லவே இல்லை.
எம் பெருமாட்டியின் கருணையினால் அன்றோ விளைந்தது என்று ஸ்லாகிக்கிறார் பட்டர்.
காமனை எரித்த கதை சொல்லும்போதும் கூட, அழகாக ஒரு பொடி வைத்துப் பேசுகிறர் பட்டர்.
காமன் அங்கம் தகனம் முன் செய்த' என்றுதான் சொல்லுகிறாரே தவிர 'காம தகனம்' என்று சொல்லவில்லை பட்டர்.
ஏன் என்றால், காமனுடைய உடல்மட்டும்தான் அழிந்தது.
காமன் மறுபடியும் உயிர் பெற்று எழுந்துவிட்டான்!
அதுவும்கூட அந்த அபிராமியின் அருளினால்தான்!
என்கிறார் பட்டர்.

Comments
Post a Comment