அபிராமிஅந்தாதிபாடல்_61
#அபிராமிஅந்தாதிபாடல்_61
.
நாயேனையும்
இங்கு ஒரு பொருளாக
நயந்து வந்து,
நீயே நினைவின்றி
ஆண்டு கொண்டாய்;
நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும்
அறிவு தந்தாய்;
என்ன பேறு பெற்றேன்!--
தாயே,
மலைமகளே,
செங்கண்மால்
திருத் தங்கைச்சியே :
என் தலை மீது உனது திருப் பாதம் வைத்து என்னை நீ ஆண்டு கொண்டாய்.
இந்த நாயேனையும் ஒரு பொருளாக அல்லவோ கருதி,
நீ அருள் புரிந்து விட்டாய். உலகம் முழுக்க ஆளும் மஹா ராணி அல்லவோ நீ!
நீயே வந்து இந்த சிறியேனுக்கும் அருள் செய்ய முன் வந்தாயே!
அந்த அருளை என்ன என்று சொல்வேன்! அதுவும் எப்படி நீ செய்திருக்கிறாய்?
நீ என்னை வந்து ஆண்டு கொண்டது கூட எனக்குத் தெரியவில்லை. அப்படி, எனக்கு சற்றேனும் தெரியக்கூட இல்லாமல்,
என் நினைவுக்கும் தெரியாமல் அல்லவா நீ எனக்கு அருள் செய்திருக்கிறாய்!
அப்படி அருள் செய்து, உன்னை அறிந்து கொள்ளும்படியான அறிவும் எனக்குத் தந்துவிட்டாய். உனது அருளை என்னவென்று சொல்வது?
அம்மா!
தாயே! மலைமகளே!
அந்த செங்கண்மாலின் தங்கையல்லவா நீ!
அதனால்தான்,
அவன் மாயம் செய்வது போலவே யாரும் அறியாமல்,
ஏன்,
எனக்கே தெரியாமல், என்னக்கு அருள் செய்திருக்கிறாய்! என்று பேசுகிறார் பட்டர்.
தாயே!
மலையரசர் மகளே!
சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே!
நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து,
நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்!
அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்.
நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!
அந்தாதித் தொடை:
சென்ற பாடல் #நாய்த்தலையே என்று நிறைய இந்தப் பாடல்
#நாயேனையும் என்று தொடங்கியது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

Comments
Post a Comment