#அபிராமிஅந்தாதிபாடல்59
#அபிராமிஅந்தாதிபாடல்59
பலன்: குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் வளரும்
தஞ்சம் பிறிது
இல்லை ஈது
அல்லது,
என்று உன் தவனெறிக்கே
நெஞ்சம் பயில நினைகின்றிலேன்;
ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பும் இக்கலராகி நின்றாய்:
அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு
மெல் அடியார்,
அடியார் பெற்ற
பாலரையே
அபிராமி அன்னையின் தாளன்றி வேறொரு தஞ்சம் இல்லை என்று தெரிந்தும்கூட,
அந்த சரணங்களிலே மனம் பயில மறுக்கின்றதே -
இந்த மனதை நான் என்ன செய்வது அம்மா? என்று கேட்டு
இந்தப் பாடலைத் தொடங்குகிறார் அபிராமி பட்டர்.
அந்த அபிராமியானவள் கைகளிலே கரும்பு வில் வைத்துக் கொண்டு இருக்கிறாள்.
ஐந்து மலர்களால் ஆனபாணரங்களையும் கொண்டிருக்கிறாள்.
காமத்தாலும்,
கோபத்தாலும்,
க்ரோதத்தாலும்
அலைபாயும்
மனதை அடக்க,
அவளது திருவடிகளை நினைப்பது அன்றி வேறொரு உபாயம் எதுவும் இல்லை.
ஆனாலும், இந்த மனது அந்த தவ சரணங்களை நினைக்காமல் மற்ற எல்லாவற்றையும் நினைக்கின்றது.
அந்த அபிராமியின் மேல் உள்ள தவம் உறுதியானதாக இருந்தால்,
மனமும்,
வாக்கும்,
நினைவும்,
செயலும்,
அனைத்தும் ஒன்றாகி,
வாக்கிலிருந்து,
எது சரியோ,
அது மட்டுமே வெளிப்படும்.
வாக்கிலிருந்து,
எது வெளிப்படுகிறதோ,
அது சரியானதாக இருக்கும்.
ஆனால்,
இங்கோ,
அமாவாசை
அன்று,
'பௌர்ணமி'
என்றல்லவா வாக்கிலிருந்து வெளிப்பட்டு இருக்கிறது.
அது தவறுதானே!
அப்படி,
தவறான ஒரு சொல் வாக்கிலிருந்து வருகிறது என்றால்,
அந்த அபிராமியின் மீதுள்ள
தவம் முழுமையான தவம் அல்ல என்றுதானே பொருள்!
எதனையே பட்டர் இங்கே சொல்லுகிறார்.
'தம்மை' 'தவறிழைத்துவிட்டவன்' என்று கருதிக் கொண்டு,
பேசுகிறார்.
"அம்மா!
அப்படியே தவறிழைத்துவிட்டாலும், தாயானவள்,
பெற்ற குழந்தைக்கு தண்டனை கொடுப்பாளோ?
இல்லையே.
பஞ்சு போன்ற மெல்லடி படைத்த மாதர்கள்,
தமது பாலர்கள் என்னதான் தவறிழைத்தாலும்கூட,
அடிக்க மாட்டார்கள்.
அதே போன்று,
நான் என்னதான் தவறு
இழைத்து இருந்தாலும்,
நீ என்னைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும்"
என்று கேட்டுக் கொள்கிறார்.
இங்கே,
வள்ளலாரின் பாடல் வரிகள்
நினைவுக்கு வருகின்றன :
"தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால்,
பிடித்தொரு தாயணைப்பள் - தாயடித்தால்,
தந்தை ஈண்டணைப்பன்..
இங்கு பேசிய தந்தையும் தாயும் நீயே ஆதலால்,
அடித்தது போதும், அணைத்திடல் வேண்டும்,
அம்மையப்பா! இனி ஆற்றேன்"
மரணத்திற்கு மிக அருகில் நின்று கொண்டிருந்த அபிராமி பட்டரும்,
அன்னையை, 'அம்மா, நான் செய்த தவறுகளை,
நீ மன்னித்து அருள வேண்டும்.
நீ எனது தாய் அல்லவா?
தாயானவள் எங்காவது தனது
குழந்தையை தண்டிப்பாளா என்ன? கிடையாதே!
எனது தவறுகளைப் பொறுத்து, என்னைக் காத்தருள வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறார்.
பொருள்:
ஒற்றைச்சிலை போன்ற அழகுடையவளும்,
கைகளில் கரும்பு வில்
(இக்கு - கரும்பு),
5 மலர் அம்புகள் ஆகியவற்றை உடையவளுமான அன்னை அபிராமியே தஞ்சம் என்று தெரிந்தபின்னரும், அவளை எண்ணாது,
பிற வழியில் நாம் செல்லினும், நம்மை அன்னை தண்டிக்க மாட்டாள். ஏனென்றால், உலகில் உள்ள சாமானிய பெண்களே, தங்கள் குழந்தைகள் தவறு செய்தால், தண்டிக்காமல் மன்னித்து விடுகிறார்கள்.
அப்போது அன்னை நிச்சியம் மன்னிப்பாள் அல்லவா?
இங்கே பெண்கள், மெல்லிய அடி உடையவர்கள்,
அதாவது, பஞ்சும் நாணும் வண்ணம் மெல்லிய நடை உள்ளவர்கள் என்று பட்டர் கூறியுள்ளார்.
"அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார் , அடியார் பெற்ற பாலரையே " -
அறியார் - அறியாதவர் (பேதை பெண்கள் -
அக்காலத்தில் பெண்கள் ஒன்றும் அறியாதவர்கள், இல்லத்தையும், கணவனையும், குழந்தைகளையும் தவிர மற்றொன்றையும் அறியாதவர்கள் என்று கொள்ள வேண்டும்)
எனினும் - ஆகினும்,
பஞ்சு அஞ்சு மெல் அடியார் (மெல்லிய அடிகள் உடைய பெண்கள்),
அடியார் (அடிக்க மாட்டார்கள்).
பெற்ற பாலரையே - பெற்ற பாலர்களை(குழந்தைகளை)
வள்ளுவரும், திருக்குறளில்
பெண்களை பற்றி கூறும் போது:
தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்
என்று கூறியுள்ளார்.
அதாவது, பெண் என்பவள், தன்னையும், தன்னை கொண்டவனையும் (கணவன், குடும்பம்),
தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை செய்து சொல்லை காத்து,
சோர்வற்று சுறுசுறுப்பாக இருப்பவள் என்று பொருள் படும்.
சோர்விற்கு சோர்வு கொடுப்பதே பெண்ணிற்கு அழகு.
சதா சிவ பதிவ்ரதா,
சதா சிவ குடும்பினி
என்றே அம்பாளுக்கு இரு சிறப்பு பெயர்கள் உண்டு.

Comments
Post a Comment