அபிராமிஅந்தாதிபாடல்57
#அபிராமிஅந்தாதிபாடல்57
ஐயன் அளந்த படி
இரு நாழி கொண்டு
அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும்
உன்னையும் போற்றி
ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும்
கொண்டு
சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய்
இதுவோ உந்தன் மெய்யருளே.
ஏ, அபிராமி!
எந்தத் தமிழ்ப் பாமாலையால் உன்னைப் பாடினேனோ,
அதே தமிழ்ப் பாமாலையால், மனிதர்களைப் பற்றிப் பாடவும், அவர்களிடம் பொய்யும் மெய்யும் பேசவும் வைத்துவிட்டாயே அன்று அங்கலாய்த்துக் கொள்ளுகிறார்.
இங்கும், நிறைய உள்ளர்த்தம் பொதிந்து காணப்படுகின்றது.
அமாவாசை அன்று, 'இன்று பௌர்ணமி' என்று சொன்னது பொய் வாக்குதானே.
ஆனாலும், அந்தப் பொய் வாக்கும், அன்னையின் கடைக்கண் பட்டுவிட்டால், மெய் வாக்காகிவிடாதா என்ன?
இந்தப் பொருள் படும்படி, 'பொய்யும், மெய்யும் இயம்ப வைத்தாய்' என்று பாடலிலே வந்தது.
உன்னைப் பாடிய வாயினால், சாதாரண மனிதர்களிடம் பேச வைத்து விட்டாயே,
அவர்களைப் பற்றிய இருப்பதையும், சில இல்லாததையும் ப்ற்றியெல்லாம் பாடும்படி,
அப்படிப் பாடுவதனால் அவர்கள் கொடுக்கும் பொருளைக்கொண்டு வாழும்படி வைத்து விட்டாயே என்று பொருள்படும்படியும்,
'பொய்யும், மெய்யும் இயம்ப வைத்தாய்' என்று பாடலிலே வந்தது.
எந்தப் பொய்யும், உந்தன் பேரருள் இருந்து விட்டால், மெய்யாகிவிடும் என்ற பொருள்படும்படி, 'பொய்யும், மெய்யும் இயம்ப வைத்தாய்' என்று பாடலிலே வந்தது.
என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே!
நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்!
அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்!
இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!).
#ஐயன்அளந்தபடியிருநாழி#
என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது.
அதனைப் பெற்ற அபிராமி,
காத்தலைச் செய்யும் காமாட்சியாகி,
முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து,
உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.
ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு -
சிவபெருமான் அளந்த இரு நாழி அரிசி நெல்லைக் கொண்டு
அண்டம் எல்லாம் உய்ய -
உலகம் எல்லாம் உய்யும் படி
அறம் செயும் -
அறங்கள் செய்யும்
உன்னையும் போற்றி -
உன்னைப் போற்றிப் பாடிவிட்டு
ஒருவர் தம் பால் -
பின் வேறொருவரிரம் சென்று
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று -
நல்ல பசுந்தமிழ்ப் பாமாலையைக்கொண்டு சென்று
பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் -
உண்மை இல்லாததையும் உண்மையையும் சொல்ல வைத்தாயே!
இதுவோ உந்தன் மெய்யருளே -
இது தான் உந்தன் மெய்யருளா?
***
உலக மக்கள் எல்லோருக்கும் படி அளப்பவளாக இருக்கும் உன்னைப் பாடிப் புகழ்ந்து கொண்டிருந்தேன்.
அப்படி இருந்த என்னை வேறொருவரிடம் சென்று படி அளக்கச் சொல்லிக் கேட்க வைக்கலாமா?
அவர்களைப் புகழ்ந்து பொய்யாக நான் பாடலாமா?
இப்படி வைப்பது உனக்கு அழகா?
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் ஐயனுமே என்று நிறைய இந்தப் பாடல் ஐயன் என்று தொடங்கியது.
இந்தப் பாடல் அருளே என்று நிறைய அடுத்தப் பாடல் அருணாம்புயத்தும் என்று தொடங்கும்.
இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

Comments
Post a Comment