#அபிராமிஅந்தாதிபாடல்-48.
#அபிராமிஅந்தாதிபாடல்-48.
சுடரும் கலைமதி
துன்றும்
சடைமுடிக் குன்றில் ஒன்றி
படரும் பரிமளப்
பச்சைக்கொடியைப்
பதித்து நெஞ்சில
இடரும் தவிர்த்து
இமைப்போது
இருப்பார் பின்னும்
எய்துவரோ
குடரும் கொழுவும்
குருதியும் தோயும்
குரம்பையிலே
பலன்: உடல் மீதுள்ள பற்று விலகும்
பொருள்:
சுடரும் கலைமதி - ஒளிவீசுகின்ற பிறை சந்திரனை, சடைமுடிக் குன்றில் - தன் குன்றினை ஒத்த சடைமுடியில் அணிந்தவரான சிவபெருமானின் நெஞ்சில் நிறைந்த,
பரிமள பச்சைக்கொடி - வாசமிகுந்த பச்சைக்கொடியே,உன்னை தன் நெஞ்சில் வைத்து, எப்போதும் வழிபடும் அடியார்கள், துன்பத்தை தவிர்த்து, மீண்டும் குருதி, தோல், குடல் நிறைந்த இப்பிறவியை பெறாமல் என்றும் மகிழ்வாய் இருப்பார்கள்.
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் -
சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல்
ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் -
ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை
பதித்து நெஞ்சில் -
மனத்தில் நிலையாகக் கொண்டு
இடரும் தவிர்த்து -
இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து
இமைப்போது இருப்பார் -
இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார்
பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே -
குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும் எய்துவார்களா? மாட்டார்கள்.
***
ஐயன் சிவந்தவன். உயர்ந்தவன். சடைமுடியை உடையவன். நிலவை அணிந்தவன்.
இவற்றை எல்லாம் பார்த்தவுடன் அபிராமிபட்டருக்கு கொடுமுடியில் நிலாப்பிறையைக் கொண்ட சிறு குன்று நினைவிற்கு வந்தது போலும். அந்தக் குன்றில் படர்ந்த மணம்வீசும் பச்சைக் கொடி போல் அம்மை இருக்கிறாள். பொருத்தமான உவமைகள்.
அழகிய காட்சிகளை மனத்தில் நிறுத்துவது எளிது.
சிறு குன்றில் படர்ந்த பச்சைக் கொடி என்பது மிக அழகிய காட்சி தானே.
அந்த அழகிய காட்சியை ஒரு நொடியேனும் மனச்சலனமின்றி மனத்தில் நிறுத்த வல்லார்கள் மீண்டும் பிறப்பிறப்பு என்ற சுழலில் அகப்பட மாட்டார்கள் என்பது பட்டரின் அறிவுரை. செவி சாய்ப்போம்.
***
அருஞ்சொற்பொருள்:
துன்றும் - தங்கும்
பரிமளம் - நறுமணம்
குடர் - குடல்
கொழு - இறைச்சி
குருதி - இரத்தம்
குரம்பை - உடல்
Comments
Post a Comment