ஆசார்யாள் காட்டும் அம்பாள் : பாகம் 4
ஆசார்யாள் காட்டும் அம்பாள் :
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
பகுதி 4
இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர்,
புராண காலத்தில்தான்
பரமேசுவரன்,
பார்வதி,
விஷ்ணு,
பிள்ளையார்
முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை.
அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள்.
ஆனால் இங்கே கேநோபநிஷத்திலோ, ‘
ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்’ என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.
‘ஸ்திரீ’, ‘ஹைமவதி’, ‘உமா’ என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள்.
பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில்,
மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது.
இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள்.
‘ஸ்திரீ’ என்று சொன்னதால் #ஆண்# #பெண்#கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது.
அவளை #உமா# என்று சொன்னதோடு நில்லாமல் #ஹைமவதி#என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும்
உபநிஷத் காலத்திலேயே வழக்கிலிருந்ததாக ஏற்படுகிறது.
(ஹிமவானின் புத்திரி ஹைமவதி;
பர்வத ராஜனின் புத்திரி பார்வதி).
இன்றைய இந்து மதத்தின் மூர்த்தி வழிபாடு புராண காலத்திற்கு முற்பட்டது.
அது உபநிஷத் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதற்கு அழுத்தமான உட்சான்று
(internal evidence )
கேநோபநிஷத்தில் கிடைக்கிறது.
உபநிஷத்தில் ஞானம் தந்தவளாகச் சொல்லப்பட்ட அம்பாளின் பாதத்தைத் தம் தலையில் வைக்குமாறு,
ஆசாரியாள் பிரார்த்திக்கிறார்.
இங்கே அம்பாளே குரு ஸ்வரூபிணி என்பது உறுதியாகிறது.
குரு பாதுகை எப்போதும் சிரஸில் இருந்து கொண்டிருப்பதாக மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இவ்விடத்தில் எப்போதும் குருவின் திருவடி தீஷை கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.
ஞான குருவாக கேநோபநிஷத்தில் தோன்றி,
வேத முடிவுக்கு அணிகலனாகத் தன் பாதங்களை வைத்திருக்கிறாள் அம்பிகை.
அந்தப் பாதங்களுக்கு உள்ள மற்ற மகிமைகளையும் இந்த சுலோகத்தில் ஆசார்யாள் கூறுகிறார்.
பெரியவர்கள்,
மகான்கள்,
ஆசாரியார்கள்
ஆகியோரின் பாதங்களுக்கு ஜலம் வார்த்து உபசாரம் செய்ய வேண்டும்.
ஷோடசோபசாரம் என்கிற பதினாறு உபசாரங்களில்,பாதங்களில் ஜலம் விடுவதைப் ‘பாத்யம்’ என்பார்கள்.
அம்பாளுக்குப் ‘பாத்யமாகப்’ பசுபதியின் ஜடையிலிருந்து கங்கா தீர்த்தம் எப்போதும் பெருகிக் கொண்டேயிருக்கிறதாம்.
சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியாக இருக்கப்பட்ட அவளுடைய சரண கமலங்களில்,
பூத லோகங்களுக்கெல்லாம் பிரபுவானதால் பசுபதி என்று பேர் படைத்த ஈசுவரனும் நமஸ்கரிக்கிறான் என்பது தாத்பரியம்.
Comments
Post a Comment