#அபிராமிஅந்தாதிபாடல்7#
#அபிராமிஅந்தாதிபாடல்7#
#பெரும்துன்பம்யாவும்நீங்கும்#
ததியுறும் மத்திற் சுழலும் என்ஆவி
தளர்விலதோர்
கதியுறு வண்ணம்
கருதுகண்டாய்
கம லாலயனும்
மதியுறு வேணி
மகிழ்நனும்
மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடி யாய்
சிந்துரானன சுந்தரியே.
பொருள்:
கமலாலயன் - தாமரையில்
உதித்தவன் - பிரம்மன்
மதியுறு வேணி மகிழ்நன் - மதி - சந்திரன் (பிறை சந்திரன்).
வேணி - வீணை உடையவள்.
பிறை சந்திரனை அணிந்தவள் - சரஸ்வதி.
பிரம்மனை கமலாலயன், மதியுறு வேணி மகிழ்நன் என்று பட்டர் கூறுகிறார்.
மால் - விஷ்ணு
அதாவது, பிரம்மனும், விஷ்ணுவும் வணங்கி, என்றும் துதிக்கும் சிவந்த பாதங்களை உடையவளே, சிந்தூர திலகம் நெற்றியில் அணிந்த அழகியே, அபிராமியே, (ததி - தயிர்) - தயிரை கடையும் மத்து போல, இவ்வுலகில் பிறப்பு - இறப்பு என்று என் ஆவி சுழலாமல் முக்திக்கு வழி வகுப்பாய்.
சௌந்தர்ய லஹரியில் ஆச்சர்யாள் தேவியின் பாத தூளியின் மகிமையை அவித்யனாம் என தொடங்கும் 3 வது ஸ்லோகத்தில்,
"ஜன்ம ஜலதௌ நிமக்னானம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி" என்று கூறியுள்ளார்.
அதாவது, சம்சாரம் என்னும் கடலில் மூழ்கியவனுக்கு அம்பாளின் பாத தூளி, வராஹத்தின் கோரை பற்கள் போல். வராஹ மூர்த்தி எப்படி, பூமி பிராட்டியை ஆழ் கடலிலிருந்து தன் கோரைப் பற்களால் தூக்கி நிறுத்தினாரோ அதுபோல அம்பாளின் பாத தூளியனது, சம்சார கடலில் மூழ்கி தத்தளிப்பவரை தூக்கி விடும்.
சம்சார சக்கரத்திலிருந்து என்னை விடுவிப்பாய் என்பதே இந்த பாடலின் சாரம்.
(உரை) தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட பிரமதேவனும், சந்திரனைத் திருமுடியில் தரித்த நின் கணவராகிய சிவபெருமானும், திருமாலும் வழிபட்டு எந்நாளும் தோத்திரம் செய்யும் செம்மையாகிய திருவடியை யுடையாய், சிந்துரத்திலகம் அணிந்த திருமுகத்தையுடைய பேரழகியே, தயிரில் கடைதற்காக அமைந்த மத்தைப் போலப் பல பிறவிகளில் சுழன்று திரியும் அடியேனது உயிர், பிறப்பிறப்பென்னும் தளர்ச்சி இல்லாததாகிய ஒப்பற்ற வீட்டு நிலையை அடையும்படி திருவுள்ளம் கொண்டருள்வாயாக.
"மத்துறு தண்டயி ரிற்புலன் றீக்கது வக்கலங்கி, வித்துறு வேனை விடுதிகண்டாய்" (திருவாசகம்) என்பது இங்கே ஒப்பீடற்குரியது. மூவரும் பணிதல்: "நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும், அயனும் பரவும் அபிராமவல்லி", "முதற்றேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே" (74, 92). சிந்துரானனம்: சிந்தூர திலகாஞ்சிதா (லலிதா. 632).
Comments
Post a Comment