அபிராமி அந்தாதி பாடல் 98.
#அபிராமிஅந்தாதிபாடல்98.
தைவந்து நின் அடித் தாமரை
சூடிய சங்கரர்க்கு
கைவந்த தீயும்,
தலை வந்த ஆறும்,
கரந்தது எங்கே?-
மெய் வந்த நெஞ்சின்
அல்லால்
ஒருகாலும் விரகர்
தங்கள்
பொய்வந்த நெஞ்சில்,
புகல் அறியா
மடப் பூங்குயிலே!
#பொருள்
ஏ, அபிராமி!
நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள்.
பூங்குயில் போன்றவளே!
உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும்,
முடிமேல் இருந்த ஆறும்
(ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?
#பொருளுரை
அன்னை ஊடல் கொண்டிருக்கிறாளாம்.
அந்த ஊடலைத் தணிக்க அந்த மகேசன் வருகிறான்.
அன்னையின் திருப்பாதங்களை வருடுகிறான்.
ஊடல் தணிகிறது. அம்மையும் அப்பனும் இணந்து காட்சி தருகிறார்கள்.
ஆனால்,
அம்மையின் குழந்தையான அபிராமி பட்டருக்கோ சில சந்தேகங்கள் எழுகின்றன.
வேடிக்கையான சந்தேகங்கள்!
அந்த சங்கரனார்க்கோ, கையிலே நெருப்பு இருக்கிறது.
அந்த நெருப்புடனே அவன் தண்டவம் ஆடுகின்றான்.
அப்படிப்பட்ட ஒருவன்,
கையிலே நெருப்புடன் எவ்வாறு அபிராமித் தாயின் பாதங்களை வருடிக்கொடுக்க முடியும்?
அந்தத் தீயை எங்கேனும் வைத்து விட்டுத்தானே வர வேண்டும்!
எங்கு வைத்திருப்பார்?
அபிராமித் தாயிடமே அந்த சந்தேகத்தைக் கேட்டுவிடுகிறார் பட்டர்.
இன்னொரு சந்தேகமும் எழுகிறது.
அன்னையின் ஊடலைத் தணிக்க வரும்போது,
சங்கரனார்,
நிச்சயமாக, அன்னையின் அடி பணிந்திருப்பார்.
அன்னையின் பொய்க்கோபம் தணியும் விதமாக புழுரைகளும் கூறியிருப்பார்.
அப்படி,
அவர் வந்து அன்னையின் பாதம் பணியும்போது நிச்சயமாக சங்கரனாரின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை அன்னையின் கண்ணிலே பட்டுவிடுவாள் இல்லையா?
ஊடலைத் தணிக்கப் போன இடத்திலே, தனது மணாளன் இன்னொருத்தியைத் தலையிலே தூக்கிவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால்,
ஊடல் தணியவா செய்யும்?
இன்னும் கொழுந்து விட்டு அல்லவா கோபம் பொங்கும்!
ஆக, அவர், தனது தலையிலே, கங்கையுடன்,
அபிராமித் தாயின் ஊடலைத் தணித்து இருக்க முடியாது.
கங்கையை,
எங்கோ மறைவாக வைத்துவிட்டுத்தான் ஊடல் தணிக்கும் முயற்சியிலேயே அவர் முனைந்திருக்க வேண்டும்!
குழந்தைக்கு இப்போது சந்தேகம் வருகிறது!
அந்த கங்கையை எங்கே மறைத்து வைத்திருப்பார்?
சந்தேகங்களை,
அபிராமித் தாயிடமே கேட்கிறார் பட்டர்.
அம்மா! அபிராமி!
மெய் பேசும் நெஞ்சில் அல்லாது பொய் இருக்கும் இடத்தில் நில்லாத தாயே! பூங்குயிலே!
உன்னை சமாதானம் செய்ய வந்த சங்கரனார்,
தனது கையிலே வைத்திருக்கும் தீயையும்,
தலையிலே வைத்து இருக்கும் கங்கையையும்,
எங்குதான் வைத்துவிட்டு வந்திருப்பார்?
கொஞ்சம் சொல்லம்மா!
என்கிறார் பட்டர்!

Comments
Post a Comment