அபிராமிஅந்தாதிபாடல்87
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், எந்தன்
#அபிராமிஅந்தாதிபாடல்87
விழிக்கும் வினைக்கும்
வெளிநின்றதால்,
விழியால் மதனை
அழிக்கும் தலைவர்,
அழியா விரதத்தை அண்டம்
எல்லாம பழிக்கும்படி,
ஒரு பாகம்
கொண்டு
ஆளும் பராபரையே!
#பொருள்
ஏ, அபிராமி!
நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு
அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே!
எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே!
(ஈதென்ன வியப்போ!)
#பொருளுரை
அந்த அன்னையின் திருவுருவம், யாருக்கும் எளிதில் கிட்டாதது.
சொல்லினால் விளம்பிவிட முடியாதது.
உலகெல்லாம் பார்த்து வியக்கும்படி மோனத்தவத்தில் இருந்த அந்த சிவபெருமானை,
ஒரு சமயம் மன்மதன் சென்று மயக்க நினத்தான்.
அவனாக நினைக்கவில்லை. தேவர்கள் அனைவரும் வேண்டிக்கொண்டதற்கிணங்கவே அப்படிச் செய்தான்.
சூரபத்மனின் அராஜகம் முற்றுப்பெறவேண்டுமென்று விரும்பிய தேவர்கள்,
அதற்கு ஒரே வழி, சிவபெருமான், இமவான் புத்ரியாக அவதாரம் செய்திருக்கும் பார்வதி தேவியைத்திருமணம் செய்துகொண்டு,
சிவ அம்சமான ஒரு குமாரனைப் பெறுவதுதான் என நினைத்தார்கள்.
ஆனால், சிவபெருமானோ, மாபெரும் மோனத் தவத்தில் இருந்தார்.
அந்தத் தவம் கலைவதாகத் தெரியவில்லை.
எத்தனை நாள்தான் காத்திருந்து பார்ப்பது?
மன்மதனைக் கொண்டுவந்தார்கள். அவனைத் தன் மலர் அம்புகளொடு சென்று, அந்த மாபெரும் யோகியை, காம உண்ர்ச்சியில் சிக்குறுமாறு செய்யச் சொன்னார்கள்.
மன்மதனும் சென்றான். தனது மலர் அம்புகளை, எய்தான்.
என்ன ஆயிற்று?
சிவ பெருமான், தனது தவத்தினைக் கலைப்பது யார் என்று பார்க்க தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார்.
அந்த அக்னி வடிவான கண்ணின் வெப்பம் தாளாமல், மன்மதன் சாம்பலானான்.
அப்படிப்பட்ட தவத்தினாரும்,
அந்த பரம யோக சிவனாரும், மயங்குமாறு செய்துவிட்ட பெரும் அழகுடைச் சீமாட்டிதான் எம் அன்னை.
அந்த யோக தக்ஷிணாமூர்த்தியும், தனது உடலிலேயே ஒரு பாதியை உமையாளுக்கு எனக் கொடுத்து விட்டாரென்றால்,
என்னவென்று சொல்வது!
யோக மூர்த்தியாய் இருந்தவர், இப்படி, போக மூர்த்தியாய் ஆகிவிட்டாரே - என்று இந்த உலகமெல்லாம் பரிகசிக்கும்படி,
அவரது உடலிலேயே ஒரு பாகத்தை எடுத்துக் கொண்ட எங்கள் அபிராமியை,
அந்த பராபரியை,
நான் என்னவென்று சொல்வேன்! யாருக்கும் எட்டாத அந்த மூர்த்தம், எனக்கு வடிவாகும்படிச் செய்த அந்த அன்னையின் கருணையை,
நான் என்னவென்று சொல்வேன் என்று சொல்லுகிறார் பட்டர்.

Comments
Post a Comment