அபிராமிஅந்தாதிபாடல்72
#அபிராமிஅந்தாதிபாடல்72
என் குறை தீர
நின்று எற்றுகின்றேன்;
இனி யான் பிறக்கில்,
நின் குறையே
அன்றி யார் குறை காண்?-
இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி
மெலிகின்ற நேர்
இடை மெல்லியலாய்!-
தன் குறை தீர,
எம்கோன் சடை மேல்
வைத்த தாமரையே
பொருள்:-
ஏ, அபிராமி!
என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன்.
இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும்.
அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே!
எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர,
தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!
இந்த வானில் தோன்றும் மின்னலையும் பழிக்குமாறு மெல்லிய இடையைக் கொண்ட தாயே!
அம்மா!
அந்த சிவ பெருமானும்கூட,
தனது குறை தீர வேண்டுமானால்,
உன்னைச் சரணடைந்து,
உனது பாதங்களைத் தனது சடையின் மேல் வைத்துக் கொண்டார்.
நானும்,
என் குறை தீர,
உன்னைத் தொழுகின்றேன்.
உன்னைச் சரணடைந்து,
நீயே கதி என்று வந்துவிட்டேன்.
அப்படி இருந்தும்கூட,
எனக்கு மறுபிறப்பு என்று ஒன்று வாய்க்குமானால், அது என் குறையா என்ன? நான் தான் உன்னைச் சரண்டைந்துவிட்டேனே.
எனவே, அப்படி ஒரு மறுபிறப்பு வாய்த்தால், அது என் குறையே அன்று. அது உன் குறைதான்.
இங்கே, அபிராமி பட்டர் மிக அழகான கருத்து ஒன்றை வைக்கிறார்.
அன்னையை முழுதுமாகச் சரணடைந்தவர்கள் மறுபடி பிறக்கவே மாட்டார்கள் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்லுகிறார்.
முழுதுமாக அவலைச் சரணடைந்தவர் களிடத்தில் வேறு எந்தக் குறையும் இருக்க முடியாது. அப்படி இருக்க, அவர்களுக்கு மறு ப்றவி வாய்த்தால், அது அவர்களுடைய குறையாக இருக்க முடியாது.
அன்னையோ எந்தக் குறையும் அற்றவள். அவளிடத்தில் குறைகளே இருக்க முடியாது.
எனவே, மறு பிறப்பே அவர்களுக்கு வாராது என்பதுதான் அந்தக் கருத்து.

Comments
Post a Comment