#அபிராமிஅந்தாதிபாடல்69
#அபிராமிஅந்தாதிபாடல்69
தனம் தரும்,
கல்வி தரும்,
ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே-
கனம் தரும் பூங்குழலாள்,
அபிராமி, கடைக்கண்களே
#பொருள்
அபிராமி!
மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே!
நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும்.
அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும்.
நல்ல கல்வி தரும்.
சோர்வடையாத மனத்தைத் தரும்.
தெய்வீக அழகைத் தரும்.
நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும்.
நல்லன எல்லாம் கிட்டும்.
#பொருளுரை
அபிராமி அன்னை எங்கும் இருக்கிறாள்,
அவளே எல்லாமாகவும் இருக்கிறாள்.
அவளை பணிந்து ஏத்துவதே,
பாடிக்கொண்டாடுவதே அவளின் அருள்தான்.
நாம் வாழும் வாழ்வே அவளின் கடைக்கண் பார்வை இருப்பதால் தான்.
இருந்தாலும், நம்மை போன்றவர்க்கு, அவளை அடி பணிவதால்,
என்னென்ன கிடைக்கும் என்று பட்டியல் போடுகிறர் பட்டர்.
தனம் தரும்.
அந்த அபிராமியைப் பணிந் தேத்துவதால்,
நமக்கு அந்த லஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
கல்வி தரும்.
லஷ்மி கடாக்ஷம் மட்டும் அல்லாது,
அந்த சரஸ்வதியின் அருளும் கிடைக்கும்.
ஒரு நாளும் தளர்வு என்பதே
அறியாத மன உறுதி வாய்க்கும்.
தெய்வத்தை ஒத்த அழகிய வடிவும் தரும்.
நல்ல நட்பும், சத் சங்கமும் தரும்.
வேறு என்னென்ன நன்மைகள் இந்த உலகில் இருக்கின்றனவோ,
அவை எல்லாமும் தரும்.
தனது அன்பர்களுக்கு,
அந்த கனத்த கரிய கூந்தலை உடைய அந்த அன்னை அபிராமி என்னதான் தரமாட்டாள்!
எல்லாமும் தருவாள்!
தனது கடைகண் பார்வையால்
அவள் நம்மைக் கடாக்ஷித்து அருள்வாள் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?.

Comments
Post a Comment